சென்னை:

எடப்பாடி பழனிச்சாமி அரசை 24 மணி நேரத்தில் கலைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள அலுவலகத்தில் காலை 9 மணி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது திடீர் போராட்டம் டிராபிக் ராமசாமி கூறுகையில், ‘‘தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத மைனாரிட்டி அரசு நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் செய்யவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலகம் அல்லது கவர்னர் மாளிகை முன்பு எனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன்’’ என்றார்.

டிராபிக் ராமசாமி தனது அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தாலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.