மதுரை: மதுரை அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே உள்ளது  உசிலம்பட்டி. இங்கு நகைப்பட்டறை நடத்தி வருபவர் தான் சரவணன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கொரோனா காலக்கட்டத்தால், அவருக்கு தொழில் சரியான முறையில் நடக்காததால், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டி வந்தவர், கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்பி கேட்டு தொல்லைப்படுத்தியதால் மனம் உடைந்தார். இதனால் கடம் மன உளைச்சலில் இருந்த சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலைமையை சமாளிக்க முடியாமல்  விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சரவணன் வீடு வெகுநேரமாகியும்திறக்காததால், அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

5 பேர் தற்கொலை குறித்து, விசாரணை நடத்தியதுடன், சரவணன் வீட்டை ஆய்வு செய்த காவல்துறையினர் அங்கிருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றி உள்ளனர். அதில், அவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை முடிவை நாடியதாக தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.