புதுடெல்லி:

தொலைக் காட்சி சேனல்களை தாங்கள் விரும்பியவாறு தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கான காலக் கெடுவை வரும் மார்ச் 31-ம் தேதி வரை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) நீட்டித்துள்ளது.

இது குறித்து ட்ராய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” தொலைக் காட்சி சேனல்களை சந்தாதாரர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்யும் நடைமுறை கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

நாட்டில் உள்ள 10 கோடி கேபிள் சந்தாதாரர்களில் 65 சதவீதம் பேரும், 6.7 கோடி டிடிஹெச் சந்தாதாரர்களில் 35 சதவீதம் பேரும் புதிய நடைமுறைக்கு மாறிவிட்டனர்.

எனினும், தொலைக் காட்சி சேனல்களை தேர்வு செய்யும் நடைமுறை புதிது என்பதால், சிலருக்கு சிக்கல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சில இடங்களில் சந்தாதாரர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை.
இணைய வசதி இல்லாத சந்தாதாரர்கள் அல்லது இணையத்தை பயன்படுத்தி விரும்பிய சேனலை தேர்வு செய்ய தெரியாதவர்கள் நேரடியாக டிடிஹெச் நிறுவனத்தையோ, கேபிள் நிறுவனத்தையோ நாடும் நிலை உள்ளது.

சில இடங்களில் சந்தாதாரர்கள் விருப்ப தேர்வு செய்யாமலேயே கட்டண சேனல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த விசயங்கள் சந்தாதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைக்கு மாறும்போது சந்தாதாரர்களுக்கு சிரமம் ஏற்படுவதை விரும்பவில்லை.

விருப்பத் தேர்வு முறைக்கு மாறாக சந்தாதாரர்களையும் மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதில் யாருக்கும் எந்த சிரமமும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை புதிய நடைமுறைக்கு மாறாத சந்தாதாரர்களுக்கு ஏற்ற சரியான திட்டத்தை வடிவமைக்குமாறு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சரியான திட்டத்தின் கீழ் சந்தாதாரர் வழக்கமாக பார்க்கும் சேனல்கள், அவர்களது விருப்பமான மொழி சேனல்கள் மட்டுமின்றி, பல்வேறு விதமான சேனல்களும் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஏற்கனவே சந்தாதாரர் செலுத்தும் மாதக் கட்டணத்தை விட கூடுதலாக சந்தா தொகை இருக்க கூடாது.

சந்தாதாரர்களின் நலன் காக்கும் பலமுனை நடவடிக்கைகளை ஆபரேட்டர்கள் எடுக்க வேண்டும். நேரடியாக சந்தாதாரர்கள் அணுகுவது, தொலைபேசி மூலம் விளக்கம் அளிப்பது, உதவி மையம் மூலம் தொடர்பு கொள்வது, செல்போன் செயலிகள் மூலம் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, இணைய தளத்தில் வசதிகளை உருவாக்குவது என பலமுனை நடவடிக்கைகளை ஆபரேட்டர்கள் எடுக்க வேண்டும்.

மேலும் சந்தாதாரர்கள், தங்களின் சுய விருப்பத்தின் படி சேனல்களை தேர்வு செய்த 72 மணி நேரத்திற்குள் அவர்களுக்கான திட்டத்தை ஆபரேட்டர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் .

சந்தாதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ட்ராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.