சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு தொடங்கிய சில  நிமிடங்களில் ரெயில் டிக்கட்டுகள் விற்பனை ஆகி விட்டன.

தமிழகத்தின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15 அன்று கொண்டாடப்படுகிறது.   நான்கு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் இப்பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக உள்ளது.    இந்த 4 தினங்கள் தவிர இந்த முறை இரண்டாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்கள் பொங்கலுக்கு முன்பு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்கான ரெயில் டிக்கட்டுகள் முன் பதிவு தொடங்கியது.   இதில் தென் மாவட்டங்களுக்கான டிக்கட்டுகள் வெகு விரைவில்  பதிவாகி விட்டன.  குறிப்பாக பாண்டியன், முத்துநகர், வைகை, பொதிகை போன்ற ரெயில்களின் அனைத்து முன்பதிவு டிக்கட்டுகளும் சில நிமிடங்களில் முடிந்து விட்டன.

இதற்கு முக்கிய காரணம் இணையம் மூலம் டிக்கட்டுகள் முன்பதிவு  நடப்பதுவே எனக் காத்திருந்த பலர் கூறி உள்ளனர்.   இனி வரும் 14 ஆம் தேதி ஜனவரி 12க்கான முன்பதிவு நடைபெற உள்ளது.   அத்துடன் பொங்கலைக் கொண்டாடி விட்டு சென்னை திரும்ப வசதியாக ஜனவரி 19 ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21 ஆம் தேதியும் ஜனவரி 20 ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 22 ஆம் தேதியும் தொடங்குகிறது.