சேலத்தில் காதலுக்காக பேய் நாடகம் ஆடிய பெண் ஒருவரை, திருநங்கை பூசாரி ஒருவர் பிரம்பால் கடுமையாக அடித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பம்சம் இதில் பூசாரியாக திருநங்கை ஒருவர் செயல்பட்டு வருவதுதான். அதனால் இந்த கோயிலில் வழிபடுவதற்கும், பூசாரியிடம் குறி கேடபதற்கும், கூட்டம் அலைமோதும்.

சில நாட்களுக்கு முன்னர் பேய் பிடித்ததாக கூறி இவரிடம் இளம் பெண் ஒருவரைக், அவரது பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். அந்த பெண்ணிடம் மூர்க்கமாக விசாரணை செய்த பூசாரி, அந்த பெண்ணின் உடலில் இருக்கும் பேயை ஓட்டுவதாக சொல்லி அவரை பிரம்பால் விளாசியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது பெற்றோரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் வலியை பொறுக்க முடியாத அந்த பெண், தனக்கு பேய் பிடிக்கவில்லை என்றும், தனது காதலனைக் கைப்பிடிக்கவே இதுபோன்று நாடகம் ஆடியதாகவும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்த பூசாரி, பொய் சொல்லக்கூடாது என அப்பெண்ணை தன் தந்தையை தாண்டி சத்தியம் செய்ய வைத்து, பின்னர் அனுப்பி வைத்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.