சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு காரணமாக போக்குவரத்து துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்றைய பேச்சிலாவது முடிவு எட்டப்படுமா? என எதிர்பார்ப்பு  நிலவி வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கமாகும். 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலையில், 13-வது புதிய ஊதிய ஒப்பந்தத் துக்கான முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது, அதில் முடிவு ஏதும் எடுக்கப்படாததால் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, அமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், அரசு கூறியபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கூறி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அரசுக்கு நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 19ந்தேதி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது எந்தவித முடிவும் எடுக்காமல், 25ந்தேதி போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று அமைச்சர் முன்னிலையில்  நடைபெறுகிறது.

சென்னை அருகே உள்ள குரோம்பேட்டையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருடன் 45 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பேச உள்ளனர்.

ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையிலாவது உடன்பாடு ஏற்படுமா என போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.