ராஞ்சி
மத உரிமை சட்டம் என்னும் பெயரில் மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரும் ஜார்க்கண்ட் மாநில பா ஜ க அரசுக்கு பழங்குடியினர் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதம் என்பது மதத் தலைவர்களை விட அரசியல் தலைவர்களுக்கே மிகவும் உதவி அளிக்கிறது என்பது வழக்கமாக பலரும் சொல்லும் ஒரு சொல். தற்போது பா ஜ க ஆட்சி புரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத உரிமைச் சட்ட மசோதாவுக்கு ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது மத மாற்ற்த் தடை சட்டத்தின் மற்றொரு பிரதிதான் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தெரிவ்த்துள்ளனர். இதற்கு பலம் சேர்ப்பது போல் அரசு சமீபத்தில் வெளியிட்ட பத்திரிகை விளம்பரம் ஒன்றில், மகாத்மா காந்தி, பிர்ஸா முண்டா, மற்றும் ஜார்கண்ட் பழங்குடித் தலைவர் கார்திக் ஓவ்ரான் ஆகியோர் மத மாற்றத்துக்கு எதிரக கருத்துக்கள் தெரிவித்ததாக காணப்பட்டது.
ஜார்க்கண்ட் வாழ் மக்களில் 27% பேர் பழங்குடியினர் ஆவார்கள். இவர்கள் இயற்கை வழிபாட்டாளர்களும் கிறித்துவர்களும் ஆவார்கள். இவர்களின் ஒற்றுமையை இந்த சட்டம் குலைக்கும் என அச்சம் பிறந்துள்ளது. இயற்கை வழிபாட்டாளர்களின் மதம் சர்னா என அழைக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட பல தலைவர்களும் இந்த சட்டம் இங்குள்ள கிறித்துவர்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ளது என்றும், இங்கு ஒற்றுமையாக வாழும் சர்னா மற்றும் கிறித்துவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் அரசின் சதி என கூறி உள்ளனர ஆனால் இதை பற்றி கவலையே படாமல் முதல்வர் ரகுபர் தாஸ் இதை சட்டசபையில் ஒப்புதல் பெற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவரான, பிரபாகர், “முதல்வர் தாஸ் பல தொழிலதிபர்களுக்கு ஜார்க்கண்டில் தொழில் தொடங்க இலவசமாக நிலங்கள் வழங்க வாக்குறுதி அளித்துள்ளார். இதற்காகவே அவர் பழங்குடியினரின் பல நிலங்களை அரசுடமை ஆக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு சர்ச்சுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்னா இனத்தவரும் இதற்காக கிறித்துவர்களுடன் சேர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களிடையே பிளவை ஏற்படுத்தி நிலங்களை அரசுடமை ஆக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளத். இந்த சட்டத்தின் மூலம் மக்களுக்கு ஆதரவாகவும், சட்டத்துக்கு எதிராகவும் செயல்படும் சர்ச்சுகளுக்கு ஒரு பாடம் புகட்ட அரசு நினைக்கிறது” எனக் கூறியுள்ளார்.
இந்த மத மாற்ற சட்டத்துக்கு தற்போது தேவையே இல்லை எனவும் ஒரு கருத்தை எதிர்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூறியுள்ளது. பல பா ஜ க அமைச்சர்களும், தலைவர்களும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை கிறித்துவர் நடத்தும் பள்ளிகளில் படிக்க வைத்துள்ள சமயத்தில் அவர்களை யாரும் மதமாற்றம் செய்யவில்லை என்றும், மத உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கும் போது தனிச் சட்டம் என்பது தேவையே இல்லை என காரணம் கூறுகின்றனர்.
”தற்போது பழங்குடியினர் கல்வி கற்று முன்னுக்கு வந்திருப்பது அரசுக்கு பிடிக்கவில்லை. இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதால் பா ஜ க அரசால் பல மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. அதனால் பிரித்தாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பா ஜ க தான் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட போகிறது” என பழங்குடியை சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரஃபுல் லிண்டா கருத்து தெரிவித்துள்ளார்.