திருச்சூர்:

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகர் சுரேஷ்கோபி, திடீரென கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை சந்தித்து பேசினார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  அய்யப்பன் கோவில் விவகாரத்தில், கோவிலுக்கு வர முயற்சி செய்யும் பெண்களுக்கு எதிரான அதிரடியான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கேரள நடிகர் சுரேஷ் கோபி. இவர் பாஜக ஆதரவாளர். இவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக தலைமை வழங்கி உள்ளது. இதையடுத்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார் சுரேஷ் கோபி.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சுரேஷ்கோபி, திடீரென கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ரசிகர்களின் வாக்குகளை பெறும் நோக்கில் அவரை சந்தித்திருக்கலாம் என்று செய்திகள் பரவின.

ஆனால், சந்திப்பு குறித்து,  சுரேஷ்கோபி கூறுகையில், ‘‘நானும் மோகன்லாலும் நீண்டகால நண்பர்கள்.எங்கள் வீட்டிற்கு பலமுறை மோகன்லால் குடும்பத்துடன் வந்துள்ளார். நானும் அவரது வீட்டிற்கு பலமுறை சென்றுள் ளேன் என்று தெரிவித்தவர், தற்போது தேர்தலில் நிற்பது,  என் வாழ்க்கையில்  முக்கியமான கட்டம் என்பதால் நான் மோகன்லாலையும் அவரது தாயையும் சந்தித்து ஆசி பெற்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.