புதுடெல்லி: டிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக, உத்திரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ.
இதுதொடர்பான வழக்கு தற்போது மும்பை காவல்துறையால் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பை காவல்துறை இதுதொடர்பாக மூன்று சேனல்களின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. அதில் ஆர்எஸ்எஸ் சார்பு ரிபப்ளிக் தொலைக்காட்சியும் ஒன்று.
இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், இந்த தொலைக்காட்சிக்கும், மும்பை காவல்துறைக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாரதீய ஜனதா ஆளும் உத்திரப்பிரதேசத்தில் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டதால், யோகி ஆதித்யநாத் அரசு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, பரிந்துரை சென்ற 24 மணிநேரத்திற்குள் சிபிஐ விசாரணைக்கு மத்திய பாஜ அரசு உத்தரவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இதனையடுத்து, ஆவணங்களை சேகரிக்க சிபிஐ குழு லக்னோ விரைந்துள்ளது. மேலும், பெயர்குறிப்பிடப்படாத சில தனிநபர்களின் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.