டிரக் ஓட்ற வேலை போய் சரக்கு கூரியரா மாறியாச்சு..

டாஸ்மாக் சரக்குனு வந்துட்டாலே புதுசு புதுசான ஐடியாக்களை உருவாக்குறதுல நம்மாளுகளை அடிச்சுக்க முடியாது.

நீண்ட இடைவெளிக்குப்பின் நேற்று டாஸ்மாக் திறக்கப்பட்ட சூழலில், அந்த கட்டுக்கடங்கா கூட்டத்தில், கடும் வெயிலில், வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பாட்டில் வாங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்று இல்லை.  வயதானவர்கள், முடியாதவர்களால் இந்த வெயிலில் வரிசையில் நீண்ட நேரம் நிற்க முடியாததால் இன்ஸ்டன்ட்டாக தோன்றிய புதிய வேலை தான், “கூரியர்ஸ்”.

இவர்களின் வேலை, முடியாதவர்களின் சார்பில் வரிசையில் நின்று அவர்களுக்குத் தேவையான சரக்கினை வாங்கி தருவது தான்.  ஒரு நபருக்கு நான்கு குவாட்டர் மற்றும் நான்கு பீர் மட்டுமே வாங்க அனுமதி என்று போலீசார் கட்டுப்பாட்டு விதித்த சூழலில் அதையே தங்களுக்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட சிலர். இந்த வேலையில் ஈடுபட்டு வருமானம் பார்த்துக்கொண்டனர்.

“டிரக் ஒட்டிட்டு இருந்தேன்.  வண்டி ஓடாத நிலையில் வருமானத்துக்காகக் காய்கறி வியாபாரம் தான் பார்த்திட்டு இருந்தேன் சார்.   ஆனா இங்க சில வியாபாரிகளுக்கு கொரோனா வரவும் அதுக்கும் வழியில்லாம போச்சு.  அதான் இப்போ நானும் என் பிரண்டும் இந்த ” கூரியர்” வேலைய பாக்குறோம்” என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த டிரைவர் குப்புசாமி விரக்தியுடன்.

இதற்கிடையில் சென்னையில் கடைகள் திறக்கப்படாததால், அருகேயுள்ள காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கடைகளை நோக்கி படையெடுக்கும் சென்னை வாடிக்கையாளர்களைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த சொல்லி காவல்துறை மேலிடத்திலிருந்து கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

 டாஸ்மாக் என்றாலே எல்லாவற்றிலும் புதுமை தான்.

– லெட்சுமி பிரியா