சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இன்றுமுதல் தொடங்கவிருந்த லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளருமான தனராஜ்,  சமீபகாலமாக டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநிலஅரசுகள் விதிக்கும் வரியே காரணம், எனவே, டீசல் மீதான வரியை  மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.

அதுபோல, பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால்,  சுங்கச்சாவடிகளில் லாரிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, சுங்கச்சாவடிகளில் ஒரு பாதையில் மட்டும் கட்டணம் செலுத்தும் முறையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தனார்.

மேலும், டீசல் விலை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மார்ச் 15-ந் தேதி  தொடங்கவிருந்த லாரிகள் வேலை நிறுத்தம், சட்டசபை தேர்தல் காரணமாக,  தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு பதில், மே 2-ந் தேதிக்கு பிறகு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.