நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் வருமான வரி கட்டவில்லை என்ற தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை  அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு அதிபர் தேர்தல் வரும் நவம்பர்  மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்துவரும் செவ்வாய்க்கிழமையிலேயே நடைபெறும். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 3-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

அமெரிக்க அரசியலில் இருபெரும் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போதைய அதிபர், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற டொனால்ட் டிரம்ப். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதுபோல மற்றொரு கட்சியான  தாராளமயத்தை கொள்கையாக கொண்ட ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக இருந்தவர் ஜோ பைடன்.  டிரம்ப் வெற்றி பெற்றால் தனது 74-வயதில் 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிப்பார். ஜோ பைடன் வென்றால் 78 வயதில் முதன் முறையாக அதிபராகும் நபர் என்ற பெருமையை பெறுவார்.

இந்த நிலையில், டிரம்பம் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கான வருமான வரிகளை செலுத்தவில்லை என்றும் 2000ம் ஆண்டு முதல் அவர் சரியான முறையில் வருமான வரி செலுத்தவில்லை என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த . 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளில் 750 டாலர் மட்டுமே செலுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், டிரம்ப்  தனது,  வணிக சாம்ராஜ்யம் பெரும் இழப்புகளைப் சந்தித்து வருவதாக கூறி வருமான வரியை குறைத்து காட்டி உள்ளார்.

அதன்படி கடந்த 2018 ம் ஆண்டில் டிரம்ப் 47.4 மில்லியன் டாலர் இழப்பைக் கோரி இருப்பதாகவும், ஆனால்,உண்மையில்,  அந்த ஆண்டு நிதி வெளிப்பாட்டில் குறைந்தபட்சம் 434.9 மில்லியன் டால் வருமானம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டிரம்ப் வருமான வரி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.

ஆனால், இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து உள்ளார். எனக்கு கிடைத்த வருமானத்திற்கு நான் வரி செலுத்தி உள்ளேன். அது தணிக்கைக்கு உட்பட்டது, என்று  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து  டிரம்ப் நிறுவனங்களின் வழக்கறிஞரான ஆலன் கார்டன் கூறியிருப்பதாவது,  டிரம்ப்,  ஜனாதிபதி டிரம்ப் கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார், இதில் 2015ல் தனது வேட்புமனுவை அறிவித்ததிலிருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தி உள்ளார் என்றார்.