வாஷிங்டன்: தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸ் இந்த உலகை விட்டு சென்றுவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும் ஓயவில்லை. மற்ற நாடுகளை காட்டிலும் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது அமெரிக்கார். இந் நிலையில் அந்நாட்டு சுகாதார நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கூறியதாவது: தடுப்பூசி இல்லாமலேயே இந்த வைரஸ் போய்விடும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை மீண்டும் நாங்கள் பார்க்க போவது இல்லை என்றார்.
தடுப்பூசி இல்லாமல் வைரஸ் மறைந்துவிடும் என்று நம்புவதற்கு என்ன அடிப்படை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், இந்த தகவலை மருத்துவ நிபுணர்களிடமிருந்து பெற்றதாகக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: நான் மருத்துவர்கள் சொல்வதை மட்டுமே நம்பியிருக்கிறேன். அது (கொரோனா) போகப்போகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அது இந்த ஆண்டு என்று அர்த்தமல்ல. எங்களுக்கு ஒரு தடுப்பூசி தேவையா என்பது தான் கேள்வி. சில சமயங்களில் அது தானாகவே போய்விடும் என்றார்.
சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் நிர்வாகம் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்தும் திட்டமான ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்டை அறிமுகப்படுத்தியது. இது குறித்து டாக்டர் ஆண்டனி பாக்சி கூறி இருப்பதாவது:  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நாம் பெற குறைந்தது ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.