மிழகத்தில் ஏற்கனவே 29 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவை தொடர்ந்து, அதிமுக ஜா,  அதிமுக ஜெ என இரண்டாக பிரிந்தபோது, ஜானகி தலைமை யிலான ஆட்சி பெரும்பான்மை நிரூபிக்க கோரி வாக்கெடுப்பு நடைபெற்றது.

தற்போது அதுபோல ஒரு வாக்கெடுப்பு நடைபெறும் சூழல் உருவாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் எழுந்த பிரிவு காரணமாக, டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும், தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

29 ஆண்டுகளுக்கு (1989 – 2017)  பிறகு…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றும் நோக்கில், சசிகலா குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக, அப்போதைய முதல்வ ராக இருந்த ஓபிஎஸ், ஜெ.சமாதியில் மவுன விரதம் மேற்கொண்டு, கட்சியை விட்டு வெளியேறி னார். அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் களம் இறங்கினர். இதன் காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது.

கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியது.

இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல வேண்டிய நிலைய ஏற்பட்டதால், அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

பின்னர் அவருக்கும் சசி குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக டிடிவி ஒதுக்கி தனி ஆவர்த்தனம் செய்ய தொடங்கி னார். இதன் காரணமாக சசிகலா அணியும் இரண்டாக உடைந்தது.

இதற்கிடையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் எடப்பாடியோடு சேர தயார் என்ற ஓபிஎஸ் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி அறிவிக்க… இரு அணியினரும் இணைந்து கட்சியின் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனால் மேலும் கடுப்படைந்த டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் எடப்பாடியை மாற்ற கவர்னரை சந்தித்து கடிதம் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

இது கட்சியை மீறிய செயல் என்று கொறடா, சபாநாயகருக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியதை தொடர்ந்து அவர்களின் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக உள்பட  எதிர்க்கட்சியின ரும் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கவர்னர், குடியரசு தலைவர் போன்றோரை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடியாக உத்தர விட்டுள்ளார்.

சபாநாயகரின் இந்த உத்தரவு ஒரு வகையில் எடப்பாடி தலைமையிலான பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களையும் தகுதி நீக்க சபாநாயகர் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கோர்ட்டு தடை காரணமாக முடிவை அறிவிக்க இயலாத நிலையில் சபாநாயகர் இருப்பதால், அதற்கு முன்பாக  எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அப்படி ஒரு முடிவை எதிர்க்கட்சிகள் எடுத்தால் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் நிலையே ஏற்படும்.

இந்த இக்கட்ட சூழ்நிலை ஏற்கனவே எம்ஜிஆர் மறைவின்போதும் ஏற்பட்டது.

தமிழக  சட்டசபை வரலாற்றில் இதுவரை 3 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.  அதுகுறித்த தகவல்…

பிளாஷ்பேக்….

ஏற்கனவே எம்ஜிஆர் மறைவை தொடர்ந்து  29 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.  அதிமுகவை தொடங்கிய  எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமை யில் ஒரு அணியும் செயல்பட்டன.

அந்த நேரத்தில்,  தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜானகி அம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக அப்போது கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா களத்தில் குதித்தார்.

இதைத்தொடர்ந்து ஜானகியை  சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க  கவர்னர்  குரானா உத்தரவிட்டார். அதற்கு  3 வாரம் காலஅவகாசமும் கொடுத்தார்.

அதன்படி, 1988-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் பெரும்பான்மை கோரும்  பலப்பரீட்சை நடைபெற்றது.

அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் முதல்வர் ஜானகிக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

கட்சி நிலவரம்

அந்த சமயத்தில் அதிமுகவுக்கு 131 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இதில் ஜானகிக்கு ஆதரவாக 98 பேரும், ஜெயலலிதா வுக்கு ஆதரவாக 28 பேரும் களத்தில் நின்றனர்.

 

எதிர்க்கட்சியான காங்கிரசில் 64 பேரும், தி.மு.க.வில் 12 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் 4 பேரும், ஜனதா கட்சியில் 3 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் 2 பேரும்,  முஸ்லிம் லீக் கட்சியில் 2 பேரும், பார்வர்டு பிளாக் கட்சியில் 2 பேரும், குடியரசு கட்சியில்  ஒருவரும், சுயேச்சையாக ஒருவரும் அவையில் இருந்தனர்.

12 இடங்கள் காலி

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக களத்தில் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவர் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் ஒருவர். அவர் தலைமையில்    அணியில் முன்னாள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம்,  துரை ராமசாமி ஆகியோர் இருந்தனர்.

சட்டசபையில் கலவரம்

இந்நிலையில், பரபரப்பான சூழலில் சபை கூடி யது. 10 மணிக்கு சட்டசபை கூடியதும், சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவியை ராஜினாமா செய்வதாக தொலைபேசி யில் தகவல் தெரிவித்ததாக கூறி சபையை ஒத்தி வைத்தார். பின்னர் 12 மணிக்கு சபை கூடியதும்,  கட்சி தாவல் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா ஆதரவாளர்களை  நெடுஞ்செழியன்,  பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், திருச்சி சவுந்தரராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், அரங்கநாயகம் ஆகிய 6 பேரை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதாக  அதிரடியாக அறிவித்தார்.

இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு சபை கூடியதும்,  மீண்டும் அமளி தொடர்ந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக  காங்கிரசில் உள்ள  ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்,  இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, குடியரசு கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

முதல்வர் ஜானகி அம்மாள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தவிர ஏனைய எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

சபை நாற்காலிகளை தூக்கி வீசி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, உள்ளே புகுந்த போலீசார் தடியடி நடத்தி ஜெயலலிதா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளி யேற்றினர்.

சபாநாயகர் காயம்

அதைத்தொடர்ந்து மாலை 3.37 மணிக்கு ஜானகி அம்மாள் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதி ராக 8 தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 முஸ்லிம் லீக் உறுப்பினர்களும், ஒரு ஜனதா கட்சி  உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து  நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அம்மாள் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஓட்டெடுப்பின்போது அவைக்கு வராத ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 27 பேரை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார்.

அன்று சட்டசபையில் நடந்த கலவரத்தில் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்பட உறுப்பினர்கள் பலர் காயம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பத்தால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்ற 2-வது நாளில் அவரது அமைச்சரவை ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டதால் ஜானகி அம்மாள் அணி ‘இரட்டை புறா’ சின்னத்திலும், ஜெயலலிதா அணி ‘சேவல்’ சின்னத்திலும் போட்டியிட்டது.

தேர்தலில் தி.மு.க. 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

தற்போது தமிழகத்தில் மீண்டும் அதுபோல ஒரு சூழல் உருவாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவும் தமிழகம் திரும்புகிறார்.

ஒருவேளை அவர் எடப்பாடி அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால், அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். அப்போது சட்டமன்றத்தில் மீண்டும் அமளி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தத்தளித்து வருகிறது.