சென்னை,

ஜெ. மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜரான தீபாவின் கணவர் மாதவன்,  ஜெ. மரணம் குறித்து சசிகலா குடும்ப உறுப்பினர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணைக்கமிஷன் முன்பு விசாரணைக்கு  ஆஜராகுமாறு மருத்துவர்கள்,  முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன் ராவ் உள்பட பல அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரை 50க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய விசாரணைக்கு, தீபாவின் கணவர் மாதவன் ஆஜரானார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாதவன்,  தனக்கு தெரிந்த உண்மைகளை நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், ஜெ. மரணம் தொடர்பாக, சசிகலா, இளவரசி, டி.டி.வி.தினகரன், விவேக், திவாகரன் உள்சபட சசிகலா குடும்பத்தை சேர்ந்த  அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என  வலியுறுத்தியதாகவும், அவர்களிடம்  உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகவும்  கூறினார்