திருப்பதி:  நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச  தரிசனம்) ஏப்ரல் 12ந்தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி எழுமலையான தரிசிக்க திருப்பதி தேவஸ்தானம் தரப்பில், கோரோனா தொற்று குறைந்த நிலையில், தினசரி சா்வதரிசன டோக்கன்கள்  (இலவச தரிசனம்) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக  நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் வரை தரிசன  டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும், கடந்த மாதம் இறுதியில், அது  22 ஆயிரம் டோக்கனாக  குறைக்கப்பட்டது. பின்னர், கடந்த வாரம்  15 ஆயிரமாக குறைத்தது.

இந்த நிலையில், தற்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்று  அதிகரித்து வருகிறது. இதனால், திருப்பதி தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல்12ந்தேதி (திங்கட்கிழமை)  முதல்  சா்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்துள்ளது.

ஏற்கனவெ மகாராஷ்டிராவில்,  ஷீரடி கோயில் தேவஸ்தானம், ஷீரடி கோவில்  தரிசனத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, திருப்பதி  தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.