டில்லி,

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், டில்லி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் சார்பாக,  குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான இன்றைய விசாரணையின்போது, டிடிவியின் கோரிக்கையை நிராகரிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்த,  அதிமுக பிளவுபட்டிருந்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும்,  ஆர்.கே.நகர்  தொகுதி இடைத்தேர்தலில் தான் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், தனக்கு அதே சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்றும் கடந்த மாதம் 23ந்தேதி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, டிடிவியின் மனு குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு  நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதில், டிடிவி தினகரனின் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும்,  இதன் காரணமாக அவருக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்குவது குறித்து கேள்வி எழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்து, மாநில தேர்தல் கமிஷன். இதில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிடாது. அதன் காரணமாக அவருக்கு சின்னம் ஒதுக்க முடியாது என்றும். தினகரன் அணியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளது.

இந்த விசாரணையின்போது, தமிழக முதல்வர் பழனிசாமி எதிர் மனு தாக்கல் செய்தார். அதில்,  தனிக்கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தை தினகரன் அணுகலாம் . அதிமுகவின் கிளை என கூறி பெயர், சின்னத்தை கோருவது ஏற்புடையதல்ல என்று கூறியிருந்தார்.

இதன் காரணமாக டிடிவி தினகரனின் குக்கர் ஆசைக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.