சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் வென்ற டி.டி.வி. தினகரனை அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றார் டிடிவி தினகரன்.

அதிமுக, திமுக கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. தினகரனின் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளன. முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோரின் ஆதரவாளர் பலர், வெளிப்படையாக தினகரனுக்கு வாழ்த்த தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களில் சில எம்.எல்.ஏக்களும் அடக்கம். தவிர சில அமைச்சர்களும் தனிப்பட்ட முறயில் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் இவர். பாராளுமன்றத்திலேயே ஜெயலலிதா மீது புகார் தெரிவித்தவர். இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரன் வீட்டில் இன்று மாலை தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா புஷ்பா. அதிமுக வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அ.தி.மு.க.வை தானே வழிநடத்தவதாகவும், தானே எல்லாம்” என்றும் தினகரன் பேசியவருவது காமெடி. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே தினகரன் இப்படி பேசி வருகிறார்” என்று கடந்த ஜூலை மாதம் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.