சென்னை:

டி.டி.வி தினகரனுக்குஆதரவாக செயல்பட்ட ரத்தினசபாபதி நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து, மீண்டும் அதிமுகவில் தொடர்வாக உறுதி அளித்த நிலையில், இன்று மற்றொரு அதிருப்தி எம்எல்ஏவான வி.டி.கலைசெல்வன் எடப்பாடியை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து,  அமைச்சர் ஜெயக்குமார், ரத்தினசபாபதி  உள்பட அதிமுக எம்எல்ஏக்களுடன் வந்து  செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன்,  மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்  என்று கூறினார்.

நான் எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவாக தான் இருப்பேன்  என்று கூறியவர், ஜெயலலிதா அமைத்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற தினகரனின் எண்ணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும்,  உண்மையான அதிமுக யார் என்பதை மக்கள் அடையாளம் காட்டிவிட்டார்கள், அதனால் மீண்டும் அதிமுகவில் தொடர்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

மேலும், வரும் 6ம் தேதி இசக்கி சுப்பையா 20 ஆயிரம் பேருடன் அதிமுகவில் இணைகிறார் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே பிரபு எம்எல்ஏ தான் அதிமுகவில் தொடர்வதாக தெரிவித்து உள்ள நிலையில், நேற்று ரத்தினசபாபதி எம்எல்ஏ எடப்பாடியை சந்தித்து பேசினார். தற்போது, கலைச்செல்வனும் அதிமுகவில்  இணைந்து செயல்படுவதாக அறிவித்து உள்ளார்.