இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் அமைந்த சர்ச்சைக்குரிய ஹாகியா சோஃபியா மசூதியில் முதல் முஸ்லீம் வழிபாட்டைத் துவக்கி வ‍ைத்தார் அந்நாட்டு அதிபர் டய்யிப் எர்டோகன்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஹாகியா சோஃபியா கட்டடம், பழைய கிழக்கு ரோமானியப் பேரரசின்(பைஸாண்டியம்) காலத்தில் ஒரு தேவாலயமாக கட்டப்பட்டதாகும் என்று கூறப்படுகிறது. இது, உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1453ம் ஆண்டு, கான்ஸ்டான்டிநோபிளை ஓட்டோமன் துருக்கியர்கள் கைப்பற்றியபோது, இந்த தேவாலயம் மசூதியாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், கடந்த 1934ம் ஆண்டு நவீன துருக்கியின் தந்தையான முஸ்தபா கெமால் அடாடர்க், இதை அருங்காட்சியமாக மாற்றினார். இந்நிலையில், கவுன்சில் ஆஃப் ஸ்டேட் எனப்படும் துருக்கியின் உச்சபட்ச நிர்வாக நீதிமன்றம், 1934ம் ஆண்டின் முடிவை ரத்துசெய்தது.
இதற்கு கிறிஸ்தவ உலகிலிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், முதல் முஸ்லீம் வழிபாட்டை துவக்கி வைத்துள்ளார் துருக்கிய அதிபர் எர்டோகன்.