த்தார் நாட்டுக்கு ஆதரவாக துருக்கி, படைகளை அனுப்ப தயாராகி வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக குற்றஞ்சாட்டப்பட்டு கத்தார் நாட்டை வளைகுடா நாடுகள் தனிமைப்படுத்தி உள்ளன.

சவுதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தை யும் முறித்துக் கொண்டுவிட்டன. தங்கள் நாட்டு கட்டுப்பாட்டில் உள்ள வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு, கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க துருக்கி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி தனது ராணுவப் படைகளையும், உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு கத்தார் நாட்டில் தன் படைத்தளத்தை நிரந்தரமாக அமைத்தது துருக்கி. இந்த நிலையில் துருக்கியில் நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கத்தாருக்கு 3,000 பேர் கொண்ட சிறப்புப் படையை அனுப்ப முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இதற்கிடையே துருக்கி அதிபர் எர்டோகன்.  கத்தார் விவகாரம் குறித்து சமீபத்தில், ‘கத்தார் நாட்டினை அராபிய வளைகுடா நாடுகள் தனிமைப்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பிரச்னைகள் ஒருபோதும் தீர்ந்துவிடாது. கத்தார் தீவிரவாதத்துக்குத் துணை செல்கிறது எனக் கூறப்படுவது கவனிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு தான்

ஆனால், கத்தார் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் நான் நன்கு அறிந்திருக்கிறேன்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.