தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள், மேலும் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 70க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 23 – 25ஆம் தேதி வரை 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அரசியல் தலைவர்கள் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திருமாவளன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தனர்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அரசியல் தலைவர்கள் மீது 143, 188, 153 (A), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.