டில்லி:

தேர்தல் கமிஷனால் இரட்டைஇலை முடக்கப்பட்டதால், தாங்கள் தான் உண்மையான அதிமுக என அதிமுகவின் இரண்டு அணிகளும் தேர்தல் கமிஷனில் ஆவனங்கள் தாக்கல் செய்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் 4 லாரிகளில் ஆவனங்கள் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. இதன் காரணமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரு அணியினரும் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனிடம் முறை யிட்டதால், தேர்தல் கமிஷன் சின்னத்தை முடக்கி வைத்தது.

இரு அணியினரும் தங்களது தரப்பு நியாயத்தை நிரூபிக்கும் வகையில், தங்களது ஆதரவு உறுப்பினர்களின் பிரம்மான பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று சசிகலா அணி சார்பில் 4வது முறையாக இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 4 லாரிகளில் எடுத்து வரப்பட்ட 1,52,000 பிரமாணப் பத்திரங்களை தமிழக சட்டத்துறை சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

இதுவரை சசிகலா தரப்பில் 3,10,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சசிகலா தரப்பினர் ஆவணங்கள் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.