டில்லி,
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுக உடைந்ததால், அதிமுகவின் பெயர், சின்னம் போன்றவை தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டது. பின்னர் உடைந்த அணிகள் மீணடும் இணைந்தது. இதன் காரணமாக, முடக்கப்பட்ட சின்னம், பெயர் மற்றும் கொடியை அதிமுகவுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கிய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிடிவி சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், தனக்கு மீண்டும் குக்கர் சின்னத்தையே வழங்க வேண்டும் என்று டிடிவி கோரியிருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து, தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்குமாறு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.