டெல்லி:

ரட்டை இலை சின்னம் குறித்தான வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.  சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் இயங்கி வந்தது.

பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.

இந்த நிலையில் , அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட்டன. ஆனால், சசிகலா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு  இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் ணையத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில்  ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால்,  தங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கடந்த 16-ந் தேதி  இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்றது. இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். பின்னர், விசாரணையை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இரு அணிகளின் ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் ஆஜராகினர். பின்னர் இவ்வழக்கின் மறுவிசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய விசாரணையில் ஓ.பி.எஸ். – எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பில் விளக்கங்களை அளித்து வாதாடினார்கள். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணை மாலை 6 மணிவரை நீடித்தது.

பிறகு, இவ்வழக்கின் மறு விசாரணை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையிலும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.