சென்னை: இலங்கை பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் 800 படத்தில் இருந்து, நடிகர் விஜய்சேதுபதி விலகிய நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து டிவிட்டர் பயனர் ஒருவர், விஜய்சேதுபதியின் மைனர் மகளை பாலியல் வன்புணர்வு துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் (Rape) மிரட்டல் விடுத்துள்ளார். இது சர்ச்சையையும், தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கும் ‘800’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை அக்டோபர் 13ந்தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டன. முத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ’முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்’, அவர் தமிழினத் துரோகி, இலங்கை அரசுக்கு ஆதரவானவர் என கூறி, விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ”தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம், புறம், அடுப்படி, மூன்றுவேளை சோறு?” என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இயக்குனர் பாரதிராஜா , சேரன், கவிஞர் தாமரை, இயக்குனர் மு.களஞ்சியம் என திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள், ஆதரவாளர்கள் என ஒட்டுமொத்தமாக, முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்றும் அவர் அந்த படத்தில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேவேளையில் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக, ராதிகா, சரத்குமார் உள்பட சிலரும் ஆதரவுகரம் நீட்டினர். அதேவேளையில் கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் இது தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில், இலங்கையில் பிறந்தது எனது தவறா, ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் எதிர்ப்புகள் எழுந்து, டிவிட்டரில் #ShameonVijaySethupathi என்ற ஹேஸ்டேக் டிரெண்டானது. மேலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்து.
இதையடுத்து முத்தையா முரளிதரன் நேற்று (19ந்தேதி) மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, நன்றி வணக்கம் என்று டிவீட் செய்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய்சேதுபதி, படத்தில் இருந்து விலகியது உறுதியானது.
800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிவிட்டர் பயனர் ஒருவர் விஜய் சேதுபதியின் மைனர் மகளுக்கு எதிராக கற்பழிப்பு அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி 800 இல் நடிக்க மாட்டேன் என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ஹிரித்திக் என்ற பெயருடைய டிவிட்டர் பயனாளர் ஒருவர், நடிகர் விஜய்சேதுபதியின் மைனர் மகள் மீது கற்பழிப்பு அச்சுறுத்தல்களை வெளியிட்டார்.
ஹிரித்திக் {Hrithik (handle: tsItsRithikRajh) } என்ற டிவிட்டர் பயனர், விஜய்சேதுபதி மற்றும் அவரது மைனர் வயதுக்குட்பட்ட மகளின் புகைப்படங்களுடன், விஜய்சேதுபதியின் மகளை பாலியல் வன்புணர்வு (Rape) செய்ய வேண்டும் எறு கடுமையான வார்த்தைகளால் டிவீட் செய்துள்ளார்.
இந்த பாலியல் வன்முறை டிவிட், மற்ற பயனர்களிடையே கடுமையான கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த குறிப்பிட்ட நபர்மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்ககப்பட்டு உள்ளது. அந் நபர், அவதூறாக பேசியதோடு, ஒரு குழந்தைக்கு எதிரான வன்முறையை ஆதரித்ததற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திமுக எம்.பி. டாக்டர் எஸ்.செந்தில்குமார், அந்த நபரின் டிவிட்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, “இவர்கள் மனிதர்களா? தயவுசெய்து இந்த நபரைக் கண்காணித்து அவரைக் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்துங்கள் ”என்று தமிழக முதல்வர் மற்றும் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர்களுக்கு டிவிட் செய்துள்ளார்.
பாடகி சின்மயியும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளார். “ஒரு தமிழ் மனிதன் தனது கருத்து வேறுபாட்டை பதிவு செய்கிறான். இதனால்தான் இந்த சமூகத்தில் பலர் வேட்டையாடுபவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இந்த அமைப்பில் யாரும் இதை மாற்றப்போவதில்லை? ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்வது பற்றி பொதுவில் சொல்லக்கூடிய ஒரு நபர் ஒரு குற்றவாளி, ”என்று அவர் பதிவிட்டுள்ளார். இது நடக்கும்போது சமூகம் ஏன் அமைதியாக பார்க்கிறது என்று அவர் வேதனை தெரிவித்தார். அத்துடன் தனது அந்த டிவிட்டுன் சென்னை காவல்துறை மற்றும் துணை போலீஸ் கமிஷனர் அடையரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர்களுக்கு அனுப்பி புகார் தெரிவித்து உள்ளார்.
மற்றொரு டிவிட்டில், “இந்த மோசமான சமூகம் இதை ஏன் செய்கிறது? இது நடக்கும்போது அமைதியாகப் பார்க்கவா? கற்பழிப்பு அச்சுறுத்தலைப் பேச ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள்? பெரியவர்கள் ஹைனாக்களைப் போல போராடும்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் கஷ்டப்பட வேண்டியது ஏன்? அதைச் செய்கிற உங்கள் அனைவருக்கும், பார்த்து மவுனமாக இருப்பவர்களுக்கும் வெட்கமாக இருக்கிறது, ”என்று கூறி உள்ளார்.
யஜினி என்ற பெயரில் செல்லும் மற்றொரு பயனர், “அங்குள்ள ஆண்களிடம், நீங்கள் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய / பாலியல் துஷ்பிரயோகம் செய்ய நினைக்கும் போது, பாதிக்கப்பட்டவர் வெட்கப்பட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டிய துஷ்பிரயோகம் நீங்கள் தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் ஏராளமானோர் பாலியல் மிரட்டல் விடுத்த அந்த டிவிட்டர் பயனை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், அவருக்கு பின்னார் இருப்பது யார் என்பதுகுறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அந்த டிவிட்டர் (ஹிரித்திக்) பயனருக்கு நடிகை கஸ்தூரி விஜய் சேதுபதியின் மகளுக்கு எதிரான டிவீட்டைக் கண்டித்தபோது, நடிகை கஸ்தூரிக்கும் கற்பழிப்பு அச்சுறுத்தல்களை வெளி யிட்டுள்ளார். இது தமிழக மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்திஉள்ளது.
அந்த குறிப்பிட்ட நபர் (ஹிரித்திக்) இதுபோன்று, டிவிட்டரில் பலருக்கு பாலியல் மிரட்டல் விடுப்பதும், பல பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு அச்சுறுத்தல்களை பதிவிட்டுள்ளமதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நடிரகை அனுஷ்கா ஷர்மாவுக்கு எதிரான பாலியல் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.