மும்பை:

மும்பையின் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தில் சிக்கி 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பையில் சமீப காலமாக தீ விபத்து அடிக்கடை நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் 18ந்தேதி கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து கடந்த 29ந்தேதி   மும்பையில் லோயர் பரேல் பகுதியில் கமலா மில்ஸ் காம்பவுண்டில் உள்ள கட்டடத்தில்  ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தீவிபத்து நடைபெற்றுள்ளது. மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு 1.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர  தீ விபத்தில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உள்பட  4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்  7 பேர் காயம் அடைந்தனர். பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கூப்பர் மற்றும் முகுந்த் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.