ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து வருகிறது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹந்த்வாராவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே மறைந்திருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த யூசின் அகமது மிர் மற்றும் தகிர் உல் இஸ்லாம் என தெரியவந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளிடம் துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏற்கனவே அமைதியின்மை நிலவி வரும் காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.