அபுதாபி: பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆகையால் மீண்டும் லாக்டவுன், வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகளை சில நாடுகள் இன்னமும் பின்பற்றி வருகின்றன.

பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் கொரோனாவின் 2வது அலை பரவி உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந் நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளின் மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.