அபுதாபி: பாகிஸ்தான் மீதான விசா கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக் கொண்டு உள்ளது.

கொரோனா வைரஸ் 2ம் அலை உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் 2ம் அலை பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாகிஸ்தான், துருக்கி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் நிறுத்தி வைத்தது.

இந் நிலையில் பாகிஸ்தான் மீது போடப்பட்டு உள்ள விசா கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக் கொண்டு இருக்கிறது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் இதை ஒப்புக் கொண்டு உள்ளார். கொரோனா காரணமாக விசா வழங்குவதில் விதிக்கப்பட்டு உள்ள அண்மைக் கால கட்டுப்பாடுகளை அவர் வலியுறுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இதுகுறித்து துபாயில் அரேபியன் நைட்ஸ் என்ற டிராவல் நிறுவனம் நடத்தி வரும் சயீத் முகமது கூறுகையில், கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு விசா ஒப்புதல் அளிப்பது அதிகரித்துள்ளது. ஆனால் தனி நபர், இளைஞர், என்றால் அவர்களுக்கு விசா அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறினார்.