பிரதமர் நரேந்திரமோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திடீரென செல்லாது என்று அறிவித்ததை எதிர்கட்சிகள் சரமாரி குற்றம் சாட்டிவரும் வேளையில் பாஜகவின் உற்ற நண்பனான சிவசேனா கட்சியும் மோடியை கடுமையாக விமர்ச்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

uttav

அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்தில் “பிரதமர் மோடி கறுப்புப் பணத்தின் மீது நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் வரவேற்கத்தக்கதுதான், ஆனால் அவர் அத்தாக்குதலை கறுப்புபணத்தின் மீது நடத்தாமல் சொந்த நாட்டின் மக்கள் மீது நடத்திவிட்டார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. இந்த நடவடிக்கையால் மக்கள் அவதிப்படுவதை பார்க்கும்போது தனக்கு மிகவும் வருத்தமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவனை சாகும் வரை அடித்துவிட்டு அவனிடம் உன் நல்லதுக்காகத்தான் அடித்தேன் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் மோடியின் நடவடிக்கையும் இருக்கிறது, இதன்மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் பணமில்லாத பட்சத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ வசதியும், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவையும் இலவசமாக கிடைக்க வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.