சென்னை: ஒருமுறை தான் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி தரப்படும் என்பது மாணவர்களை தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளில் பல்வேறு குழப்பங்கள் நடந்திருப்பது தெரிய வந்தது. பல மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், 10th, +2வில் அதிக மதிப்பெண் எடுத்தவர் கூட நீட்டில் ‘0’ எடுப்பது எப்படி? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது:

ஆள்மாறாட்ட முறைகேட்டை அடுத்து, நீட் OMR பதில் தாள்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. 10th, +2வில் அதிக மதிப்பெண் எடுத்தவர் கூட நீட்டில் ‘0’ எடுப்பது எப்படி? திறமை-தகுதி இருந்தாலும் யார் மருத்துவராக வேண்டும் என்பதை வெளியில் இருக்கும் சிலர் தீர்மானிக்கிறார்களா?
இதைக்கேள்வி கேட்காமல் ஒருவருக்கு ஒருமுறை தான் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி தரப்படும் என்கிறது அடிமை அரசு. இது மாணவர்களை தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே. கோச்சிங் செல்ல முடியாத கிராமத்து ஏழை எளிய பிள்ளைகள் ஒதுங்குவர். இதுதான் பாஜக-அதிமுகவின் கூட்டு சதி என்று கூறி உள்ளார்.