சென்னை: காப்பி அடித்து போலி ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்கக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, யுஜிசி சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மாணவர்கள், தங்களின் ஆராய்ச்சி கருத்துகளை சொந்தமாக வெளியிட வேண்டும். ஏற்கனவே, யாரோ வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை காப்பியடித்து ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், சமீபகாலமாக, முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பை(பிஎச்டி) மேற்கொள்ளும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர், முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்லது தாங்கள் ஏற்கனவே வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை, சற்று அட்ஜஸ்ட் செய்து காப்பியடித்து, புதிதுபோல் மாற்றி சமர்ப்பிப்பதாக பல புகார்கள் எழுகின்றன.

இதுகுறித்து, யுஜிசி சார்பில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; காப்பியடிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பவர்களுக்கு, வேலை வாய்ப்போ, பதவி உயர்வோ வழங்கக்கூடாது. இந்த விஷயத்தில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.