தேவேந்திர ஃபட்னவீஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வராகவும், சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணியின் தலைவராகவும் உத்தவ் தாக்கரேவை நியமிக்க மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் ஒப்புதல் அளித்தனர். இதன்மூலம், மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே வரும் டிசம்பர் 1ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

மூன்று கட்சியின் எம்.எல்.ஏக்களும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, “மஹாராஷ்டிர மாநிலத்தை ஆளுவேன் என நான் ஒருபோதும் கனவு கண்டதில்லை. சோனியா காந்தி, சரத்பவார் மற்றும் மற்றவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தேவேந்திர ஃபட்னவீஸ் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளிக்கத் தயாராகா இருக்கிறேன். நான் எதற்கும் அச்சப்படவில்லை. ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது. உங்களுக்கு வேண்டும் என்றால் அரவணைப்பீர்கள், வேண்டாம் என்றால் விலகிவிடுவீர்கள். நீங்கள் எங்களை விலக்கி வைக்க முயற்சித்தீர்கள்.

தற்போது நீங்கள் அனைவரும் வழங்கியுள்ள பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் தனித்து அல்ல, நீங்கள் அனைவரும் என்னுடன் முதல்வராக உள்ளீர்கள். இன்றைக்கு நடந்ததுதான் உண்மையான ஜனநாயகம். மகாராஷ்டிர விவசாயிகளின் கண்ணீரை நாம் ஒன்றிணைந்து துடைத்தெறிவோம். சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை நாம் மீண்டும் உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.