லண்டன்: பிரிட்டன் தேர்தலில் தலையிட வேண்டாம் என்று இங்கிலாந்து மக்கள், அங்குள்ள பாஜக அமைப்பை எச்சரித்துள்ளனர்.
அடுத்த மாதம் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக அங்குள்ள முக்கிய கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.


இந்த நிலையில், அந்நாட்டின் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம், அந்த கட்சியானது காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது என்று பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் என்ற அமைப்பானது வலியுறுத்தி வருகிறது.


இதுதொடர்பாக மக்களிடத்தில் இந்த கருத்துகளை பரப்பி வருகிறது. அதற்காக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ஹாரோ பகுதியில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து உள்ளது.
இதற்கு பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் தேர்தல் விவகாரத்தில் காஷ்மீர் விவகாரத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்று கூறி இருக்கின்றனர்.


இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை தொழிலாளர் கட்சியானது மாற்றியிருக்கிறது. இதுகுறித்து இந்தியாவுக்கு அக்கட்சி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: காஷ்மீர் பிரச்சனை என்பது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்னையாகும். அதை 2 நாடுகளுமே பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.


மற்ற நாடுகளின் பிரச்னைகளில் தலையிடுவது என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானது தொழிலாளர் கட்சி. உலகில் உள்ள அனைத்து மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களின் கவலை என்று கூறியிருக்கிறது.