லன்டன்:  பஞ்சாப் வங்கி மோசடி காரணமாக தலைமறைவான பிரபல குஜராத் வைரவியாபாரி இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா தாக்கல் செய்த ஆவனங்களை எதிர்த்து, அவர் தாக்கல் செய்திருந்த  மேல்முறையீட்டு மனு இங்கிலாந்து நீதிமன்றத்தால்  தள்ளுபடி செய்யப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச்சென்றவர் குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி.  இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு (2019) மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது லண்டனின் வாண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு ஜாமின் வேண்டும் என்று நீதிமன்றத்தில்  பலமுறை ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்து வருகிறார்.  ஆனால், இந்தியா தரப்பில்  நிரவ் மோடியை நாடு கடத்துமாறு வலியுறுத்தி வருவதுடன், அவருக்கு ஜாமின் வழங்கவும் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக அவரது பல ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.   28 நாள்களுக்கு ஒரு முறை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். இந்த வழக்கை நீதிபதி சாமுவெல் கூஸீ  விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில், அவரை நாடு கடத்த வேண்டும் என அமலாக்கத்துறை பல்வேறு ஆதாரங்களை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  இதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என நிரவ் மோடி தரப்பில்  வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  சாமுவெல் கூஸீ,  ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் வழக்கில் இந்திய அரசு வழங்கிய ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டியதுடன், எனவே இந்த முறையும் இந்திய அரசு வழங்கிய ஆதாரங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டும் என்று தெரிவித்தார்.

மேலும், நிரவ் மோடியின்  மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி  செய்ததுடன், வழக்கின்  இறுதி விசாரணைக்கான அமர்வு 2021 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.