டெல்லி: ஜம்மு காஷ்மீர் தொடர்பாக, சீனாவின் கோரிக்கையை ஏற்று, ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரும் செவ்வாய்கிழமை கூடுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 370வது பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது. மாநிலமும் லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன்களாக பிரிக்கப்பட்டன.

தொடர்ந்து பதற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

இது ஒருபுறம் இருக்க, இந்த பிரச்னையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சீனா கொண்டு சென்றிருக்கிறது. கடந்த ஆக.16ம் தேதி ஐநாவில் இந்த பிரச்னையை சீனா எழுப்ப முயன்று அது பலிக்காமல் போனது.

ஆனால் இந்த முறை ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. வரும் செவ்வாய்கிழமை ஐநா கூடுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக கடந்த 12ம் தேதி பாக். வெளியுறவு அமைச்சர் முகமது ஷா குரேஷி ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இந்த முறை ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா சபை நிச்சயம் கூடி ஆலோசனை நடத்துகிறது என்றும் இது ஒரு ரகசிய கூட்டம் என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறி இருக்கிறது.

இது தொடர்பாக ஐநாவுக்கான சீன தூதர் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். பாகிஸ்தானை குரலை செவிமடுப்பதாகவும், ஜம்முகாஷ்மீர் நிலைமை பற்றி ஐநாவில் விவாதிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.