யாங்கன்:
மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைற்றுவரும் நிலையில் அவசர நிலையை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக ஜனநாயக ஆதரவாளர்களது போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மியான்மர் நாட்டில் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. ஆங் சன் சூ காய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாங்கன் உள்ளிட்ட முக்கியத் நகரங்களில் ஆங் சன் சூ காய் ஆதரவாளர்கள் பேரணி நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் பலர் ராணுவத்தின் அராஜகத்தை கண்டித்து தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் விதிமுறை மீறலுக்காக பேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.