சென்னை:
பத்திரப்பதிவு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை கோரி வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பதிவு செய்வதற்கான புதிய விதிமுறை களுடன் கூடிய அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இதையடுத்து அங்கிகரிக்கப்படாத வீட்டு மனை பத்திரப்பதிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு தாக்கல் செய்த புதிய விதிகளை ஏற்று அரசணையின் விதிகளின்படி பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி வரையிலான காலங்களில் செய்யப்பட்ட பத்திரப்பதிவு செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டு மனு செய்தது.
அதற்கு விளக்கம் அளித்துள்ள உயர்நீதி மன்றம்,
கடந்த 20.10.2016 க்கு முன்னர் பதிவு செய்த நிலங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மறுப்பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டுமானம் துவங்கலாம்.
அரசின் புதிய விதிப்படி கட்டுமானம் செய்து கொள்ளலாம்.
தடை அமலில் ( 9. 9 2016, 28.03 2017 வரை ) இருந்த போது நடந்த பதிவான மனைகளுக்கு இது பொருந்தாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கின் விசாரணை ஆக. 28ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.