டெல்லி: எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில், அந்நாட்டை எதிர்க்க துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது என்று ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. அதன் எதிரொலியாக அதிக எண்ணிக்கையில் படை வீரா்கள் எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

சீனா என்ற வார்த்தையை சொல்வதற்கு கூட பிரதமர் பயப்படுகிறார். ஆனால் சீனாவோ தொடர்ந்து படைகளைத் தயார் செய்யவும், நிலைநிறுத்தவும் செய்கிறது. அத்துமீறலை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை. துரதிருஷ்டவசமாக, பிரதமர் மோடிக்கு அந்த தைரியம் இல்லை என்று விமர்சித்துள்ளார்.