காஞ்சிபுரம்

குழந்தையை கடத்துபவர் என சந்தேகப்பட்ட மொழி தெரியாத நபர் மர்மமாக மரணம் அடைந்துள்ளார்.

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் சின்னையன் சத்திரம் ஆகும்.   இங்கு ஒரு 40 வயது மதிக்கத் தக்க நபர் சந்தேகமாக காணப்பட்டுள்ளார்.   உறங்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் சிறு குழந்தை அருகே அவர் அமர்ந்துக் கொண்டிருந்துள்ளார்.   அவர் மேல் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளனர்.   ஏதோ புரியாத மொழியில் அவர் ஏதோ கூறி உள்ளார்.

அவர் பேசுவது என்ன மொழி என யாருக்கும் புரியவில்லை.   அவருக்கு தமிழும் தெரியவில்லை.   அவர் குழந்தையை கடத்துபவர் என சந்தேகித்த அந்த ஊர்க்காரர்கள் அவரை அங்கிருந்து விரட்டி உள்ளனர்.   அவர் அங்கிருந்து போவது போல் பாவலா காட்டி விட்டு மீண்டும் அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த ஊரார், அவரை அடித்து உதைத்துள்ளனர்.   தலையில் காயத்துடன் மயங்கி விழுந்த அவரை ஊர்க்காரர்களே மருத்துவமனையில் சேர்த்து அவர் மேல் காவல்துறையிட்ம் புகார் அளித்துள்ளனர்.   காவல்துறையினர் சென்ற போது அந்த நபர் மருத்துவ மனையில் இல்லை.   அங்கிருந்து அவர் தப்பி விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறி உள்ளனர்.

அவரை காவலர்கள் தேடிச் சென்றுள்ளனர்.  சுமார் அரை கிமீ தூரத்தில் அவர் சாலை ஓரத்தில் பிணமாக கிடைத்துள்ளார்.    இது குறித்து மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்வதற்காக அழைத்துப் போக இருந்த போது தப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர்.   தப்பிக்கும் அளவுக்கு உடல் வலு உள்ளவர் மருத்துவமனைக்கு சிறிது தூரத்தில் மரணம் அடைந்துள்ளது மர்மமாக உள்ளதாக கிராமத்தினர் கூறி உள்ளனர்.