டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி தொடங்குகிறது.

நாடாளுமன்றத்தின் 2 மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி, தமது 3வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் அமர்வின் முதல் பகுதி ஜனவரி 29ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன் பிறகு பட்ஜெட் ஆவணங்களை ஆய்வு செய்ய 3 வார இடைவெளி விடப்படும். தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் பகுதி மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும்.