டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லி நோக்கி பேரணியாக வந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடுத்து மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

நாளை 5ம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த உள்ளது. இந் நிலையில் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில், விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.