புதுடெல்லி

லேசியாவில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்களை மீட்க உடனடியாக விமானம் அனுப்பப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவரது ட்விட்டரில் கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகள், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்கும் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு மருத்துவம் படித்துவரும் இந்திய மாணவ – மாணவிகள் 200 பேர் வெளியேறியுள்ளனர். இந்தியா வருவதற்காக தமிழக மாணவர்கள் உள்பட அனைவரும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்துள்ளனர்.

ஆனால் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்ப விமான சேவை இல்லாததால் மாணவர்கள் அனைவரும் அங்கு தவித்து வருகின்றனர். தங்களை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் இந்தியா திரும்ப முடியாமல் கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற பயணிகளை பாராட்டுகிறேன். உங்களுக்காக டெல்லி மற்றும் வைசாக் ஆகிய நகரங்களில் இருந்து ஏர் ஏசியா விமானங்களை அனுப்ப நாங்கள் இப்போது அனுமதி தந்துள்ளோம். இவை கடினமான காலங்கள். ஆகவே நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புரிந்து கொள்ள வேண்டும். விமான நிறுவனத்தை நீங்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்று அவர் கூறியுள்ளார்.”