டெல்லி: விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது, அவர்களது பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவ: புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக அரசானது, விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறது.

அவர்களின் பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராகவே இருக்கிறது. பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது. பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழி.

எந்த பேச்சுவார்த்தை இல்லாவிட்டால், அது தவறான தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும். சர்ச்சைகள் எழும். பேச்சுவார்த்தை இருந்தால் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.