இந்தூர்: மத்திய அமைச்சர் தவர்சந்த் கெலாட் மகள் கொரோனா தொற்றுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  44 வயதான அவர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் கெலாட். அவருடைய மகள் யோகிதா சோலங்கிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து, முதலில் உஜ்ஜைனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நலம் மோசமடைந்ததால், இந்தூரில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

80 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று நள்ளிரவு  உயிரிழந்துள்ளார். அவருக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

44 வயதாகும் யோகிதா சோலங்கிக்கு கணவரும் 23, 20 வயதுகளில் ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். இது  மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.