டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம் செய்துள்ளது.

கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பல்கலைக்கங்களில்,  இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற செமஸ்டர் கள்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.

யுஜிசியின் அறிவிப்பை எதிர்த்து,  உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். வழக்கின் கடந்த விசாரணையின்போது,  பல்கலைக்கழக மானியக் குழு  (யுஜிசி)  சார்பில் பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது

அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,  பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து எந்தவித திட்டமும் இல்லை, இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால், அது   மாணவர்களின் எதிர்காலத்தில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டே இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது என்று வாதிட்டயுஜிசி, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது என்றும் வலியுறுத்தியது.

தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.