மொரதாபாத்

பாஜக ஆளும் உத்திரப் பிரதேச மாநில மொராதாபாத் நகரில்  கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்யப் பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.


உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணிகளுக்கு 1003 பேர் தேவைப்பட்டனர்.   இது அரசுப்பணி ஆகும்.    இந்தப் பணிக்கு 1100 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  அதில் ஏராளமான முதுகலை, இளங்கலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர்.   இவர்களில் 63 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குச் செயல் முறை தேர்வு நடந்துள்ளது.

 

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் ஆவார்கள்.  இவர்களை பாஜகவின் உத்திரப் பிரதேச அரசு எவ்வித பாதுகாப்பு சாதனமும் இன்றி கழிவு நீர் கால்வாயைச் சுத்தம் செய்யச் சொல்லி உள்ளது.  அரசுப் பணி என்பதால் அவர்கள் வேறு வழியின்றி இந்த கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியைச் செய்துள்ளனர்.

இந்த தகவல் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   தூய்மை இந்தியா என்னும் பெயரில் பாஜகவின் பிரதமர் மோடி பல திட்டங்கள் தீட்டி வரும் நிலையில்  அதே பாஜகவின் யோகி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பட்டதாரிகளைக் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் அமர்த்த உள்ளது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.