லக்னோ

பாஜக தலைவர் அமித்ஷா நடுஇரவில் ஜாட் இன தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 கட்டங்களாக நடைபெறும் உத்தரபிரதேச தேர்தலில் முதல்கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்நிலையில் மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் இல்லத்தில் பாஜக தலைவர் அமித்ஷா அரசியல் சார்பற்ற ஜாட் சமூக தலைவர்களை கடந்த செவ்வாய் கிழமை நடு இரவில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்கு சிலமணி நேரத்திற்கு முன் அனைத்து ஜாட் சமூக தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது அமித்ஷாவுடன் ஹரியானா மாநில அமைச்சர்கள் மற்றும் கேப்டன் அபிமன்யு, ஓ. பி தங்கர் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

சந்திப்பின் போது செல்பேசிகளை கொண்டுவரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. செய்தியாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.

ஜாட் சமூக பிரச்னைகள் குறித்து அமித்ஷா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜாட் சமூகத்தினர்:

ஜாட் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டை பாஜக திரும்ப பெற்றது ஏன்?
ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?

தங்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறாதது ஏன்?

எல்லாவற்றுக்கும் ட்வீட் செய்யும் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் சரண்சிங்கின் பிறந்தநாள் குறித்து எதுவும் சொல்லாதது ஏன்?

உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினர்.

அவர்களின் கோபத்தை தணிக்கும் விதமாக பின்னர் பேசிய அமித்ஷா,  ஜாட் சமூகத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவைப்பதாக வாக்குறுதி அளித்தார் என சொல்லப்படுகிறது.