வாஷிங்டன்:

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தகவல் தொடர்பு, இணையதள சேவைகள்  தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை உடனே நீக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் குழு இந்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு வந்த  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. அதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அங்கு கடுமையான கட்டுப்பாடுகள், போலீஸ் தடை உத்தரவு போன்றவை விதிக்கப்பட்டன. தொலைபேசி சேவை, இணையதள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன.

தற்போது அங்கு நிலமை சீரடைந்து வரும் நிலையில், தொலைபேசி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தடை உத்தரவுகளும் நீக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் அனைத்து தடைகளும் நீக்கப்படும் என மாநில கவர்னர் மாலிக் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில்,  இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் மற்றும் 13 அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீரில் தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கப்பட்டுள்ள விவகாரத்துக்கு தீர்வுகாண வேண்டும். அங்கு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என கடந்த மாதம் அமெரிக்க சென்ற பிரதமர் மோடியை சந்தித்து  வலியுறுத்தினர். தற்போது,  அமெரிக்க பாராளு மன்றத்தின் வெளியுறவுத்துறை விவகாரங்கள் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

‘இந்திய அரசு காஷ்மீரில் தகவல் தொடர்புகளை இருட்டடிப்பு செய்துள்ளது அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த  தடைகளை நீக்குவதற்கும் இந்தியாவில் மற்ற குடிமக்கள் அனுபவிக்கும் சுதந்திரம் மற்றும் உரிமைகளை காஷ்மீர் மக்களும் அனுபவிக்க வழிசெய்யவும் இந்தியாவுக்கு இது சரியான நேரமாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழு ஆசிய-பசிபிக் மற்றும் பரவல் அல்லாத துணைக்குழு அக்டோபர் 22 அன்று காஷ்மீர் மற்றும் தெற்காசியாவின் பிற பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவும்  திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு நிதியுதவி, சுகாதாரம், பிறநாடுகளில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு ஆலோசனை கூற இந்த குழுக்களுக்கு உரிமையுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.